வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வள்ளியூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

Update: 2020-02-20 22:00 GMT
வள்ளியூர், 

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வள்ளியூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜ் நகரை சேர்ந்த ஜேசையா மகன் பாலன் (வயது 45). அவருடைய மனைவி சுஜந்தா பிரியதர்ஷினி (44). கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் கணவன்– மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சமரசம் செய்ய முயன்ற சுஜந்தா பிரியதர்ஷினியின் சகோதரர் அந்தோணி அல்போன்ஸ் விஜய்யை, பாலன் அரிவாளால் வெட்டிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வள்ளியூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை அதிகாரியான முத்துபிரேம் சந்த், தற்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வள்ளியூர் கோர்ட்டு கடந்த 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு 

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த்க்கு வள்ளியூர் கோர்ட்டு மீண்டும் 6–வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், நேற்று நடந்த விசாரணைக்கும் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு, வள்ளியூர் கோர்ட்டு நீதிபதி மாயகிருஷ்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்