ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் கமி‌ஷனரிடம் பா.ஜனதா மனு

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதாவினர் மனு.

Update: 2020-02-20 22:15 GMT
நெல்லை, 

பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதாவினர் மனு கொடுத்துள்ளனர்.

புகார் மனு 

நெல்லை மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் மகாராஜன் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் டாமோரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

தி.மு.க.வை சேர்ந்த அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்டம் என்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது. அதை பார்த்த போது, அவர் எங்கள் கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜாவை பற்றி அவதூறாக பேசி உள்ளார். மேலும் அவரது சமுதாயத்தை பற்றியும் தவறாக பேசி உள்ளார். பிற சமுதாயத்தை சேர்ந்த நீதிபதிகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் இழிவுபடுத்தி பேசி உள்ளார்.

நடவடிக்கை 

எனவே ஆர்.எஸ்.பாரதி மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது இடத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நீதிபதிகளை இழிவுபடுத்தியதற்காகவும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்