கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத அரசு கட்டிடம்

தோவாளை தாலுகாவில் திடல் வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதாவது 3 ஆண்டுகளாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

Update: 2020-02-21 21:45 GMT
பூதப்பாண்டி, 

தோவாளை யூனியன் கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

திடல் கிராம நிர்வாக அலுவலர் கடுக்கரை கிராம அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் திடல் பகுதியில் இருக்கின்ற மக்கள் அன்றாட பொது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். 

ஏனென்றால் திடல் பகுதி மக்கள் கடுக்கரைக்கு சென்று தான் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கின்ற நிலை நிலவுகிறது. எனவே திடல் கிராம நிர்வாக அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

இதனை நீங்கள் நேரில் ஆய்வு செய்து திடலுக்கான கிராம நிர்வாக அலுவலரை அவருக்காக ஒதுக்கப்பட்ட திடல் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்