செல்போனில் பேசியபடி சென்றதால் விபரீதம்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 7 பேர் காயம் டிரைவர் தப்பி ஓட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே செல்போனில் பேசியபடி ஷேர் ஆட்டோவை டிரைவர் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-02-22 23:00 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி சத்யவேடு சாலையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. குருதானமேடு அருகே அந்த ஆட்டோ வந்தபோது, டிரைவர் செல்போன் பேசியபடி ஆட்டோவை இயக்கி கொண்டிருந்தார்.

இதனால் ஏற்பட்ட கவனக்குறைவால் சாலையோர மூடப்பட்டிருந்த பெட்டிக்கடையின் மீது ஆட்டோ மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த பயணிகளான சூரவாரிகண்டிகை கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 52), காயத்திரி (17), கவரைப்பேட்டையை சேர்ந்த நிக்கேஷ்(20), பவன்குமார் (29) ஆகிய 4 பேர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த குருவராஜகண்டிகையை சேர்ந்த சிவா (34), பெரியபுலியூரை சேர்ந்த நடராசன்(47), சூரவாரிகண்டிகையை சேர்ந்த கவுரி(33) ஆகிய 3 பேர் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

விபத்துக்கு காரணமான ஷேர் ஆட்டோ டிரைவர், தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்