நாகையில் குறைந்த அளவு மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கவலை

நாகையில் குறைந்த அளவு மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-02-23 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் பிரதான தொழிலாக உள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்வர்களும், 50 ஆயிரம் பேர் மீன்பிடி தொழில் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை, புயல், கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் விழும்பில் இருந்து தொழில் செய்து வரும் நாகை மீனவர்களை, அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். மேலும் படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர். நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதுபோக 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர்.

குறைந்த அளவு சிக்கும் மீன்கள்

மீனவர்கள் வலையில் மத்தி, கானாங்கெழுத்தி, இறால், கனவா, திருக்கை, பாறை, வஞ்சிரம் உள்ளிட்ட ஏராளமான வகை மீன்களும், நண்டுகளும், இறால்களும் சிக்குகின்றன. இவ்வாறு வலையில் சிக்கும் மீன்களை விற்பனை செய்ய அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், கோவை, விழுப்புரம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாகையில் கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்து குறைந்து காணப்படுகிறது. மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பிய மீனவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கின. இதில் கனவா, மத்தி, இறால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன்கள் சிக்கின. குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் மீன்வர்கள் கவலை அடைந்தனர்.

விலை குறைந்தது

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், நாகை மாவட்ட மீனவர்கள் சுனாமி, கஜா புயல் என பல்வேறு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டனர். இது தவிர இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு படகுகளையும் பறிகொடுத்து பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது குறைந்த அளவு மீன்கள் சிக்கி வருவதால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மீன்கள் விலையும் குறைந்து காணப் படுகிறது.

நாகையில் மீன்பிடித்துறைமுகத்தில் ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்ற வெள்ளை வாவல் ரூ.800-க்கும், 700-க்கும் விற்ற வஞ்சிரம் 500-க்கும், ரூ. 400-க்கு விற்ற ஓட்டுக்கனவா ரூ.220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்