சிறப்பு புகைப்பட கண்காட்சி

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவை யொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

Update: 2020-02-25 22:15 GMT
பெரம்பலூர், 

சிறப்பு புகைப்பட கண்காட்சியினை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர். 

கண்காட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த புகைப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. 

நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் திரைப்பட பிரிவின் மூலம் தயார் செய்யப்பட்ட தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகள் குறித்த முத்திரை பதித்த மூன்றாண்டு, முதலிடமே அதற்கு சான்று என்ற குறும்படம் அதிநவீன எல்.இ.டி. திரை வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. இதனை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

இதில் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தாசில்தார் பாரதிவளவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்