கணவரை கண்டித்து வீட்டின் முன்பு பெண் தர்ணா- பரபரப்பு

வேர்கிளம்பி அருகே கணவரை கண்டித்து வீட்டின் முன்பு பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2020-02-26 23:30 GMT
திருவட்டார்,

வேர்கிளம்பியை அடுத்த முளவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங்(வயது 38). மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும் சிராயன் குழியை சேர்ந்த சோனியாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிரேஸ்லின் என்கிற மகன் உள்ளார்.

இந்த நிலையில் சோனியாவிடம், ஜெயசிங் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகளிர் போலீசில் புகார் அளித்து அவர்கள் பேச்சுவார்த்தைநடத்தி உடன்பாடு ஏற்பட்டது.

பின்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. பிறகு ெஜயசிங் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவு படி சோனியாவும், மகன் கிரேஸ்லினும் குடும்ப வீடான முளவிளைவீட்டில் வசித்து வந்தனர்.

பொருட்கள் திருட்டு

இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி மாலை சோனியா மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருந்தன. அதோடு வேறு பூட்டால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியா கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் உறவினர் வீட்டில் தங்கினார்.

தர்ணா

இதற்கிடையே நேற்று சோனியா தனது வீட்டில் நடந்த திருட்டிற்கு நீதி கேட்டு தனது வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்லும்படி சோனியாவை கூறினர். அதனைத்தொடர்ந்து சோனியா வீட்டில் குடியேறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்