மயிலாடும்பாறை அருகே, வங்கி கடனை செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை

மயிலாடும்பாறை அருகே வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-27 22:45 GMT
கடமலைக்குண்டு,

மயிலாடும்பாறை அருகே உள்ள சிறப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(வயது 50). விவசாயி. இவருக்கு சிறப்பாறை அருகே சொந்தமாக தோட்டம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மலிங்கம் கம்பத்தில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் கடன் பெற்று இருந்தார்.

இந்தநிலையில் அவருக்கு விவசாயத்தில் தொடர்ந்து ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக தர்மலிங்கத்தால் வங்கியில் பெற்ற கடனுக்கு சரிவர தவணை தொகை செலுத்த முடியவில்லை. இதனால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி தரப்பில் இருந்து தர்மலிங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் மனம் உடைந்த தர்மலிங்கம் வங்கி கடனை திருப்பி செலுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனால் தர்மலிங்கம் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி நேற்று முன்தினம் தர்மலிங்கம் அவரது தோட்டத்தில் வி‌‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தர்மலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்