செந்துறை அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்

செந்துறை அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2020-03-04 00:00 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூரில் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு குருச்சிகுளம், ஆர்.எஸ்.மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் வேன் மூலம் வந்து சென்று கொண்டிருந்தனர். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் குருச்சிகுளத்தில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்த வேன் சித்துடையார் கிராமத்தை அடுத்து, குழுமூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் வேனை சாலையின் ஓரத்தில் திரும்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 10 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான விக்னே‌‌ஷ், அஜய் சங்கர் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்