சென்னையில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த லாரி

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தது.

Update: 2020-03-04 21:45 GMT
பெரம்பூர், 

சென்னை கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. இந்த லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் இருமுளை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு டிரைவர் சரவணன், கொருக்குப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை நோக்கி லாரியை ஓட்டிச்சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஆர்.கே.நகர் போலீஸ் நிலைய நுழைவுவாயிலில் உள்ள வளைவின் மீது மோதியது.

மேலும் நிற்காமல் தொடர்ந்து ஓடிய லாரி, அருகில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் அலுவலகத்தின் மீது மோதி நின்றது. முன்னதாக அதன் அருகில் நிறுத்தி இருந்த ஆட்டோ மீதும் மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரி மோதியதில் தி.மு.க. பகுதி செயலாளர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலைய நுழைவுவாயில் சேதம் அடைந்தன. ஆட்டோவும் நொறுங்கியது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சரவணனிடம் விசாரித்து வருகின்றனர். லாரி மோதியதில் ஆட்டோவில் அமர்ந்து இருந்த ஒருவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் செய்திகள்