கணவர் கண் எதிரே பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-03-05 22:15 GMT
ஆவடி,

சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவருடைய மனைவி சகுந்தலா(54). இவர்கள் இருவரும் கட்டிடத்தொழிலாளர்கள் ஆவர். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் அருகே வந்தபோது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி, இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது.

இதில் கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த சகுந்தலா மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனது கணவர் கண்எதிரேயே சகுந்தலா பரிதாபமாக இறந்தார். சேட்டு, அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சகுந்தலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரான திருமுல்லைவாயலைச் சேர்ந்த தசரதன் (51) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்