மேட்டுப்பாளையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி திடீர் சாவு

மேட்டுப்பாளையத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி திடீரென்று பரிதாபமாக இறந்தாா்.

Update: 2020-03-06 23:00 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (43). இவர்களுடைய மகள் சஞ்சனா (வயது 6). இவர் அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சனா ஒரே மகள் என்பதால் பெற்றோர் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சஞ்சனா காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு சஞ்சனா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று சஞ்சனாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சஞ்சனாவை மீண்டும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சஞ்சனா சாதாரண காய்ச்சலுக்கு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித் தனர்.

மேலும் செய்திகள்