திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-06 22:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் காந்திபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் புஷ்பராஜ் (வயது 26). கூலி தொழிலாளி. இவர், அதே ஊரைச் சேர்ந்த வனஜாவை (23) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

புஷ்பராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த மாதம் புஷ்பராஜ் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து விட்டு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை காப்பாற்றினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பராஜ் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தற்கொலை செய்த புஷ்பராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்