விவசாயி மர்ம சாவு ; உறவினர்கள் சாலை மறியல்

தர்மபுரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-03-06 22:56 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மேலாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 32). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் முனியப்பன் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முனியப்பனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் நேற்று மாலை கிருஷ்ணாபுரத்தில் தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் கூறுகையில், முனியப்பன் எப்படி இறந்தார்? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்