ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்யக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முகவர்

ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்யக்கோரி முகவர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் திருவாரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-09 23:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே கொரடாச்சேரி திருவிடைவாசல் பகுதியை சேர்ந்தவர் ரமே‌‌ஷ்(வயது 40). ரியல் எஸ்டேட் முகவரான இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் திருவாரூர் வடக்கு வீதிக்கு வந்தார். பின்னர் அவர், அங்கு உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் திடீரென ஏறினார்.

செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர், ‘ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் என்பவரிடம் வீட்டு மனைகள் வாங்க பலரிடம் இருந்து ரூ.20 லட்சம் பணம் வசூல் செய்து கொடுத்தேன். ஆனால் வீட்டு மனைகளும் கிடைக்கவில்லை. பணமும் திருப்பி தரப்படவில்லை. எனவே நீதிமோகனை கைது செய்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும். அதுவரை கீழே இறங்கி வர மாட்டேன்’ என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தயார் நிலையில்...

இதனை அறிந்த தாசில்தார் நக்கீரன், திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த ரமேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டது. 108 ஆம்புலன்ஸ்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்கொலை மிரட்டல் விடுத்தவரை காண வடக்கு வீதியில் மக்கள் அதிகமாக கூடியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ரமேசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி கீழே வந்தார். அவரை போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரியல் எஸ்டேட் முகவர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு(2019) மே மாதம் திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன்(40) என்பவர், இதே செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, ‘ரியல் எஸ்டேட் அதிபர் நீதிமோகன் என்பவரிடம் வீட்டு மனைகள் வாங்க பலரிடம் இருந்து பணம் வசூல் செய்து கொடுத்தேன். ஆனால் வீட்டு மனைகளும் கிடைக்கவில்லை, பணமும் திருப்பி தரவில்லை’ என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்