வேதாரண்யம் அருகே மீனவர்களிடையே மோதல்; 10 பேர் காயம்

வேதாரண்யம் அருகே மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-03-11 00:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கடல் பகுதியில் நாகை மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.

இதையறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 10-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், விசைப்படகில் சுருக்குமடியை பயன்படுத்தி மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை விரட்டி சென்றனர்.வெள்ளப்பள்ளம் மீனவர்கள் விரட்டி சென்றதை அறிந்த நாகை விசைப்படகு மீனவர்கள் அதிவேகமாக படகை ஓட்டிச்சென்றனர். இருப்பினும் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் பின்தொடர்ந்து படகை விரட்டி சென்றதால் நாகை மீனவர்கள் படகில் இருந்து கற்கள், சோடா பாட்டில் கொண்டு வெள்ளப்பள்ளம் மீனவர்களை தாக்கினர்.உடனே வெள்ளப்பள்ளம் மீனவர்களும், நாகை மீனவர்களை தாக்கினர்.

சாலை மறியல்

இதில் 10 மீனவர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 6 பேரும், கீச்சாங்குப்பம் மீனவர் ஒருவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வெள்ளப்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் சிகிச்சை பெற்றனர்.

மீனவர்கள் தாக்குதலை கண்டித்து வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் சண்முகம், வேட்டைக்காரனிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபா‌‌ஷ் சந்திரபோ‌‌ஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட திரண்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இரு பிரிவு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்