கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கரூரில் அரசு பஸ்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.

Update: 2020-03-10 22:30 GMT
கரூர்,

கொரோனா என்கிற வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் பஸ் நிலையத்திலிருந்து திருப்பூர், ஈரோடு, கோவை, சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் இருமல், சளி, தும்மல் உள்ளிட்டவைகள் மூலம் எளிதில் அத்தகைய வைரஸ் பரவக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கரூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களில் கிருமிநாசினியை போக்குவரத்து கழக பணியாளர்கள் தெளித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையை கையாண்டனர்.

பயணத்தை முடித்த பிறகு...

மேலும் கரூர் மக்கள் அடர்த்தி அதிகமான நகரம் ஆகும். இங்கு வேலை நிமித்தம் உள்ளிட்டவற்றுக்காக பலதரப்பட்ட மக்கள் பஸ் போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இருமல், சளிதொல்லை உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். கைக்குட்டையை அனைவரும் உபயோகப்படுத்திட வேண்டும். பயணம் முடிந்த பிறகு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று சோப்பு போட்டு கை, முகத்தினை கழுவிட வேண்டும் என போக்குவரத்து கழக கரூர் மண்டல பொதுமேலாளர் குணசேகரன் பயணிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, துணை மேலாளர் முத்து, கிளை மேலாளர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்