சூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா

சூளகிரி அருகே 100 காளைகள் பங்கேற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.

Update: 2020-03-12 23:00 GMT
சூளகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்ன சப்படி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, பெரிய சப்படி, சின்ன சப்படி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விழாவிற்கு அழைத்து வரப்பட்டிருந்தன.

தொடர்ந்து காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் காளைகள் மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. மைதானத்தில் காளைகளை அவிழ்த்து விட்டதும் அவை சீறிப்பாய்ந்தவாறு மைதானத்தை சுற்றி, சுற்றி வந்தன.

திரளான பொதுமக்கள்

அப்போது ஆர்வமிக்க இளைஞர்களும், மாடுபிடி வீரர்களும் துள்ளிக் குதித்து சென்ற காளைகளை விரட்டி சென்று அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப்பொருட்கள் மற்றும் அலங்கார தட்டிகளையும் பறிக்க முயன்றனர். ஆனால், காளைகள் அவர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டியவாறு பாய்ந்து ஓடின. இதனை கண்டு அங்கு திரண்டிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

விழாவையொட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த எருதுவிடும் விழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். இதையொட்டி சூளகிரி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்