தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக புகார்: கொளத்தூர்மணி உள்பட 4 பேர் மீது வழக்கு

தாயிடம் கத்தியை காட்டி இளம்பெண்ணை கடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து கொளத்தூர் மணி உள்பட 4 பேர் மீது பவானி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

Update: 2020-03-14 22:45 GMT
பவானி,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). பி.எஸ்சி பட்டதாரி. பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி சாந்தி மகள் இளமதி (23). பிகாம் பட்டதாரி.

பவானி அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் செல்வமும், இளமதியும் வேலை பார்த்தார்கள். அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

சுயமரியாதை திருமணம்

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி சேலம் மாவட்டம் மேட்டூரில் பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தின் செயலாளர் ஈஸ்வரனின் வீட்டில் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இளமதியின் தந்தை ஜெகநாதன் உள்பட அவருடைய உறவினர் 18 பேர் சென்று செல்வத்தை தாக்கிவிட்டு, இளமதிைய தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது.

இதுபற்றி மேட்டூர் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெகநாதன் உள்பட 18 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.

மேலும் அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்போது இளமதி தன்னுடைய தாயுடன் இருக்கிறேன் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

இதற்கிடையே இளமதியை காணவில்லை என்றும், அவர் எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில் சாந்தி, மகள் இளமதியுடன் கடந்த 10-ந் தேதி பவானி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், 'என்னுடைய மகள் எங்கும் செல்லவில்லை. மாயமாகவும் இல்லை. என்னுடன்தான் இருக்கிறார். ஆனால் பெரியார் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். மேலும் கடந்த 9-ந் தேதி இவர்கள்தான் என்னிடம் கத்தியை காட்டி என் மகள் இளமதியை மேட்டூருக்கு கடத்தி சென்றார்கள்' என்று கூறி இருந்தார்.

அதன்பேரில் பவானி போலீசார் நேற்று கொளத்தூர்மணி, ஈஸ்வரன் மற்றும் சரவணபரத், செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ்நிலையத்தில் ஆஜர்

இந்த நிலையில் நேற்று மதியம் இளமதி மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வக்கீலுடன் ஆஜரானார். இது பற்றி தகவல் அறிந்ததும் பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு குவிந்திருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆஜரான இளம்பெண் இளமதியிடம், போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழக ஈரோடு மாவட்ட தலைவர் நார்த்திகர் ஜோதி அங்கு வந்து, போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜனிடம் இளம்பெண்ணை சந்தித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு அவர் அனுமதி அளித்தார். பின்னர் வெளியே வந்த நார்த்திகர் ஜோதி, நிருபர்களிடம் கூறும் போது, இளம்பெண் இளமதி தனது பெற்றோரிடம் செல்வதாக கூறி உள்ளார் என்று தெரிவித்து விட்டு சென்றார். இரவு 8.30 மணி வரை நடந்த விசாரணைக்கு பிறகு, இளமதியை அவரது தாயாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்