ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2020-03-14 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி “முத்திரை பதித்த 3 ஆண்டு, முதலிடமே அதற்கு சான்று” என்ற தலைப்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர். இதில் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

கைவினை பொருட்கள்

மேலும், மகளிர் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதில் 36 மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் 190 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.13 கோடியே 72 லட்சம் கடன் உதவி உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், தாசில்தார் பரிமளா, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், கே.சி.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

மேலும் செய்திகள்