பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவர் கொலை 5 பேர் கைது

பெங்களூருவில் மதுபாட்டிலால் தாக்கி கார் டிரைவரை கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-03-15 00:27 GMT
பெங்களூரு,

பெங்களூரு நாகரபாவி அருகே உள்ள ஜோதிநகரை சோ்ந்தவர் பிரசாத்(வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பிரசாத் கடந்த 11-ந்தேதி இரவு தனது மனைவியிடம் ரூ.500 வாங்கிக் கொண்டு அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்த சென்றார்.

மதுபான கடையில் வைத்து பிரசாத் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் உள்ள மேஜையில் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், பக்கத்து மேஜையில் அமர்ந்து மது அருந்தியவர்களில் ஒருவரின் செல்போன் மாயமானதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள், பிரசாத்திடம் கேட்டுள்ளனர்.

அப்போது பிரசாத், தான் செல்போனை எடுக்கவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவர்கள் செல்போனை பிரசாத் தான் எடுத்ததாக கருதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை ரிங்ரோட்டில் உள்ள அறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் பிரசாத்தின் மனைவி சுகன்யா அங்கு வந்தார். அப்போது அவர் முன்னிலையிலும் மர்மநபர்கள் பிரசாத்தை தாக்கி உள்ளனர். அப்போது சுகன்யா, தனது கணவரை விட்டுவிடும்படியும் மறுநாள் கொண்டு விடுவதாக கூறியுள்ளார். இதனை மறுத்த அவர்கள், சுகன்யாவை திரும்பி அனுப்பினார்கள்.

இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு அவர்கள், சுகன்யாவுக்கு போன் செய்து, பிரசாத் சுயநினைவை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா, ரிங்ரோட்டில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு பிரசாத் சுயநினைவு இன்றி மயங்கி கிடந்தார். மற்ற யாரும் அங்கு இல்லை. இதையடுத்து சுகன்யா, தனது கணவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து சுகன்யா, சந்திர லே-அவுட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் தொடர்புடைய சுபாஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் 5 பேரும், பிரசாத் செல்போனை திருடியதாக கருதி தாக்கி கொன்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவர்கள் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்