நாங்குநேரியில் இரட்டைக் கொலை: போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

நாங்குநேரியில் நடந்த இரட்டைக் கொலையில் போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-03-15 22:00 GMT
நாங்குநேரி, 

நாங்குநேரியில் நடந்த இரட்டைக் கொலையில் போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டைக் கொலை 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் நாங்குநேரி மெயின் பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலில் அவருடைய உறவினர் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த சுரேஷ் (25) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஒரு மர்ம கும்பல் காரில் ஓட்டல் முன்பு வந்து இறங்கியது. பயங்கர ஆயுதங்களுடன் திடீரென அந்த கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து, ஆறுமுகத்தையும், சுரேசையும் அரிவாளால் சரமாரி வெட்டிக் கொலை செய்தது. பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து உடனடியாக தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்றது.

2 தனிப்படை அமைப்பு 

நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த இரட்டைக்கொலையை தொடர்ந்து நாங்குநேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சபாபதி, ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஜோஸ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்