சேலத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

சேலத்தில் மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-16 00:00 GMT
சேலம்,

சேலம் மணியனூரில் உள்ள காளியம்மன், அன்னதானப்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், சண்முகாநகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் என அடுத்தடுத்து 3 கோவில்களில் கடந்த 13-ந்தேதி இரவு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் பகுதியில் மேலும் 4 கோவில்களிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருட்டு

சேலம் அருகே திருமலைகிரியில் ஒரே வளாகத்தில் அய்யனாரப்பன், கருப்பசாமி, பெரியாண்டிச்சி அம்மன் கோவில்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதுதவிர, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜை நடைபெறும் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தவுடன், பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்து பார்த்தபோது, 3 கோவில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், இது குறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் அங்கு வந்து உடைக்கப்பட்டு கிடந்த உண்டியலை பார்வையிட்டனர். அப்போது, 3 உண்டியல்களிலும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் உருவம் ஏதேனும் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் 2 திருடர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அவர்கள் கைக்குட்டையை முகத்தில் கட்டியிருந்தனர். இதனால் அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவதாபுரம்

இதேபோல், சேலம் சிவதாபுரம் பகுதியில் பச்சைப்பட்டினி மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். ஆனால் உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது? என்ற விவரம் தெரியவில்லை.

இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே கும்பல்

சேலத்தில் ஏற்கனவே 3 கோவில்களில் மர்ம நபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து 4 கோவில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தனிப்படை அமைத்துள்ளார். இந்த தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவத்தை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 7 கோவில்களிலும் ஒரே கும்பல் தான் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்