ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை மீட்கக்கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-03-16 22:00 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டம் கடியப்பட்டணம், முட்டம், ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம்துறை, பூத்துறை, தூத்தூர், குறும்பனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 600–க்கும் மேற்பட்ட மீனவர்களும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 மீனவர்களும் ஈரான் நாட்டில் கீஸ், சாரக், லாவன், பு‌ஷர், கங்கோன் உள்ளிட்ட பல இடங்களில் அரேபிய முதலாளிகளிடம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்த நிலையில் உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாக பரவி வருவதால், அங்கு மீன்பிடி தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் வெளியேறவும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மீனவர்கள் சரிவர உணவு கிடைக்காமல் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி சமூக வலைதளங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

எனவே ஈரான் நாட்டில் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள் உள்பட தமிழக மீனவர்களை உடனே மீட்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தற்போது வரை மீனவர்கள் மீட்கப்படவில்லை. இதனால் மீனவர்களை மீட்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரானில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி குமரி மீனவர் பாசறை சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் ரீகன் ரொனால்ட் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்ரீன், ரூபன், வர்க்கீஸ், ஜெகநாதன், கிம்லர் மற்றும் மீனவர்களின் உறவினர்கள் எராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்