பெண் குழந்தை சாவில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை ஆய்வுக்காக உறுப்புகள் அனுப்பிவைப்பு

தோகைமலை அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் ஏற்பட்டதால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் உறுப்புகள் ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-03-17 00:00 GMT
தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடுகப்பட்டி கிழக்குமேடு பகுதியை சேர்ந்தவர் சிவசிங்கபெருமாள் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (30). இந்ததம்பதிக்கு சசினா (10), சாதனா (7) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த சங்கீதாவிற்கு, கடந்த 10-ந்தேதி பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வது முறையாக பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தம்பதி குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பஞ்சப்பட்டி ஆரம்பசுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தநிலையில் குழந்தை இறந்ததில் மர்மம் இருப்பதாக சந்தேகம் அடைந்த டாக்டர்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பிரபுவிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவசிங்கபெருமாள்-சங்கீதா தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், இறந்த குழந்தையை தம்பதி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தங்களது தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் குழந்தையின் தந்தையான சிவசிங்கபெருமாளை போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகாமுனி முன்னிலையில், குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் செங்குட்டுவன், மணிவாசகம் ஆகியோர் குழந்தை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, பஞ்சப்பட்டி வருவாய் அலுவலர் ரமேஷ், போத்துராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அன்புராஜ், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் குழந்தையின் உள்ளுறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்து ஆய்வுக்காக, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தையின் உடல் அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் குழந்தை கொல்லப்பட்டதா? அல்லது உடல்நலக் குறைவால் இறந்ததா? என்ற முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்