மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-03-16 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கிட்டம்பட்டி அருகே உள்ள வெள்ளாமுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் நடந்த ஒரு விழாவுக்கு சென்றார். விழா முடிந்த பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மணிகண்டன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டில் வசிக்கும் மூதாட்டி லட்சுமி (80) என்பவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் லட்சுமியை தாக்கினார். இதில் காயமடைந்த லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மகேந்திரமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தர்மபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி பரமராஜ் நேற்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்