திருமணமாகி 5 மாதத்தில் கருத்து வேறுபாடு: ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் குடும்பத்தகராறில் கோபித்து கொண்டு மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-16 21:45 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த திருநின்றவூர், கெங்குரெட்டிகுப்பம், ஜெயராம் நகரை சேர்ந்தவர் கோபி (வயது 24). இவர் சென்னை ரெயில்வேயில்( ஐ.சி.எப்.) ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யா (21). இவர்களது சொந்த ஊர் அரக்கோணம் ஆகும். இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில், தம்பதிகளுக்கு இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனைவி சத்யா கோபித்துக்கொண்டு அருகில் வசிக்கும் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், நேற்று காலை கோபி, மனைவி சத்யாவை மாமியார் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து தாய் வீட்டிலேயே இருந்து விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்த கோபி நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெண்வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில், திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்