வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2020-03-16 22:15 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது பாத்தபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக சாந்தி சந்திரனும், ஊராட்சி செயலாளாராக ஸ்டீபனும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊராட்சியின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வரும் சுரேஷ் என்பவர் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகிய 2 பேரும் மட்டும் சேர்ந்து பயன்படுத்த கூடிய அலுவலக கணக்கு தொடர்பான பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தனது விருப்பப்படி புதிதாக மாற்றி அமைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கான அலுவலக கடவுச்சொல்லை தலைவர் மற்றும் செயலாளருக்கு தெரியாமல் மாற்றிய துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், துணைத்தலைவரை உடனடியாக மாற்றி புதிய புதியவரை நியமனம் செய்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் பாத்தபாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான கோரிக்கை மனுவை கும்மிடிப்பூண்டி கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் நேற்று வழங்கப்பட்டது. மேலும் முன்னதாக அவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊராட்சியின் தலைவராக சாந்தி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்