கொரோனா வைரஸ் ஆலோசனை கூட்டம்: மகளிர் சுயஉதவிக்குழு மூலம் முககவசம் தயாரிக்க நடவடிக்கை கலெக்டர் ‌ஷில்பா தகவல்

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்புக்காக மகளிர் சுயஉதவிக்குழு மூலம் முககவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2020-03-16 21:53 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வருகிற 31-ந் தேதி அனைத்து சினிமா தியேட்டர்களும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுத்தமாக வைத்து இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போக்குவரத்து துறையின் மூலம் அனைத்து பஸ்கள் ஒரு முறை சென்று வந்த பின்னர் பஸ்களின் இருக்கைகள், கம்பி பிடி, கம்பி போன்றவற்றை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

வட்டார போக்குவரத்து துறையின் மூலம் மாநகர எல்லைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சோதனை சாவடி அமைத்து ஆட்டோக்களில் செல்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த வழியாக வரும் ஆட்டோக்களை டிரைவர்கள் சுத்தமாக வைக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

ஆம்னி பஸ்களின் ஒரு முறை சென்று வந்த பின்னர் சுத்தம் செய்கிறார்களா? என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்களின் தரை, கைகழுவும் இடம் ஆகியவைகள் சுத்தமாக வைக்கப்பட்டு இருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

நாங்குநேரி சுங்கச்சாவடி, கங்கைகொண்டான் சோதனை சாவடிகளில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் அரசு பஸ்களை நிறுத்தி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முககவசம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளித்து முககவசம் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணி‌‌ஷ் நாரணவரே (நெல்லை), பிரத்தீக் தயாள் (சேரன்மாதேவி), பயிற்சி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், சுகாதார பணிகளின் துணை இயக்குனர் வரதராஜன், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்