திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-16 22:34 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜீவாநகர், மீனவர் காலனி, சரவணபொய்கை ரோடு ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாக 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டனர்.

தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மோட்டார் பழுது சரிசெய்யப்பட்டு உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும். வழக்கம்போல் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்