அகமத்நகரில் சிவசேனா நிர்வாகி சுட்டுக்கொலை 6 பேருக்கு வலைவீச்சு

அகமத்நகர் மாவட்டத்தில் சிவசேனா நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-03-16 23:39 GMT
மும்பை, 

அகமதுநகர் மாவட்டம் கோபர்காவ் தாலுகாவில் உள்ள போஜனே கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் கிரே பாட்டீல். இவர் சிவசேனா கட்சியின் கோபர்கான் துணை மாவட்ட தலைவர் பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுரேஷ் கிரே பாட்டீலை சுட்டனர். இதில் குண்டு உடலில் பாய்ந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சுரேஷ் கிரே பாட்டீல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷ் கிரே பாட்டீலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய 6 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர். இவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொலைக் கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்