ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

ஈரோட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-17 23:30 GMT
ஈரோடு,

ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). அந்த பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியிடம் அவர் நன்றாக பழகி வந்தார். இதனால் அந்த தம்பதியின் 9 வயது மகள், மாரியப்பன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அந்த சிறுமி 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

பள்ளிக்கூடம் விடுமுறையில் பெற்றோர் வேலைக்கு சென்றபோது, சிறுமியை மாரியப்பனின் வீட்டில் விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தநிலையில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் சிறுமியை அவளது பெற்றோர் மாரியப்பனிடம் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

போக்சோ சட்டம்

மாலையில் அவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது சிறுமி சோர்வடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் அவளிடம் பெற்றோர் கேட்டபோது, மாரியப்பன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுது கொண்டே கூறினாள்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்