தொப்பூர் அருகே விபத்து கட்டிட மேஸ்திரி பலி கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் படுகாயம்

தொப்பூர் அருகே விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியானார். கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-03-17 22:30 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ (வயது 20), செக்காரப்பட்டியை சேர்ந்த சண்முகம் (19), இலக்கியம்பட்டியை சேர்ந்த சிங்காரவேலன் (19) ஆகிய 3 பேரும் நல்லம்பள்ளி அருகே தொப்பூரில் ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்த பின்னர் ஒரு மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மொபட்டை இளங்கோ ஓட்டி வந்தார்.

நல்லம்பள்ளியை அடுத்த கெங்கலாபுரம் பகுதிக்கு இவர்கள் வந்து விட்டு தனியார் பாலிடெக்னிக் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் சடையன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செல்வம் (35), அவருடைய மனைவி பூங்கொடி (33) ஆகியோர் வந்து கொண்டி ருந்தனர்.

விபத்து

எதிர்பாராதவிதமாக இளங்கோ ஓட்டி வந்த மொபட்டும், செல்வம் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

அதன்பின்னர் கட்டுப்பாட்டை இழந்த இளங்கோ மொபட், அந்த வழியாக பென்னாகரம் அருகே சின்னம்பள்ளியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி தமிழரசன் (35) என்பவர் ஓட்டிவந்த மொபட் மீது மோதியது.

மொபட்டுகள், மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தமிழரசன் உள்பட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் 6 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார்.

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்