சேலம் மாவட்டத்தில் 8 நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 7,710 முகக்கவசங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் 8 நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த 7,710 முகக்கவசங்களை பறிமுதல் செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-03-17 23:30 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் முகக்கவசம் மற்றும் கை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவை மருந்து கடைகள், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த பொருட்களில் அதிகபட்ச சில்லறை விலை, தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மாதம், தேதி போன்ற விவரங்கள் இல்லாமல் விற்கப்படுவதாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில், சேலம், தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) கோட்டீஸ்வரி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் சீனிவாசன், சந்திரன், உதவி ஆய்வர்கள் சாந்தி, ஞானசேகரன், சிவகுமார், அன்பழகன் ஆகியோர் சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனங்களில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

முகக்கவசங்கள் பறிமுதல்

இந்த ஆய்வின் போது 8 நிறுவனங்களில் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் கூடுதல் விலை, தயாரிப்பாளர் முகவரி, தயாரிப்பு மாதம், தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லாமல் முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் விலைக்கு விற்க வைக்கப்பட்டிருந்த 7,710 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த 8 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடுகள் நடைபெறும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்