புகார் கொடுக்க, விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருபவர்கள் கை கழுவிவிட்டு வர வேண்டும்

புகார் கொடுக்க மற்றும் விசாரணைக்காக போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், கை கழுவி விட்டு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-03-17 23:30 GMT
சின்னசேலம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார் அதன் பேரில் கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை மற்றும் புகார் கொடுக்க வருகிறவர்கள், கை கழுவிய பின்னரே போலீஸ் நிலையத்துக்குள் வர வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் அறிவுறுத்தி உள்ளார்.

வாளியில் தண்ணீர்

அதன்படி சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு புகார் மற்றும் விசாரணைக்காக வரும் பொதுமக்கள் கை கழுவுவதற்காக, போலீஸ் நிலையத்துக்கு வெளியே நுழைவு வாயிலில் வாளியில் தண்ணீர், ஜக்கு, சோப்பு மற்றும் துண்டு ஆகியவற்றை போலீசார் வைத்து உள்ளனர்.

இதனால் போலீஸ் நிலையத்துக்கு வருகிறவர்கள் கை கழுவிக்கொண்டு உள்ளே செல்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, பிரபாகர் மற்றும் போலீசார் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்