ஆம்பூரில் தண்டோரா போட்டு வரிவசூல்: கார் பார்க்கிங், திருமண மண்டபங்களுக்கு ஜப்தி நோட்டீஸ்
ஆம்பூரில் தண்டோரா போட்டு வரிவசூல் செய்யப்பட்டது. வரி செலுத்தாத கார் பார்க்கிங் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆம்பூர்,
ஆம்பூர் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்தாமல் அதிகளவில் பாக்கி வைத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் வரிகளை வசூலிக்க அனைத்து நிலை அலுவலர்களும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று வரி வசூலிக்க தண்டோரா போட்டும், ஜப்தி வாகனத்துடன் சென்று வசூல் பணியில் ஈடுபட்டனர். வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உடனடியாக வரிகளை செலுத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் நகரப்பகுதி முழுவதும் ஜப்தி வாகனத்துடன் தண்டோரா போட்டு வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது அதிக வரிபாக்கி வைத்துள்ள திருமண மண்டபங்கள், கார் பார்க்கிங் ஆகியவற்றுக்கு நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாத பொதுமக்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நகராட்சி பகுதியில் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ய பொதுமக்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரியை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.