நடிகர் சாகித் கபூர் சென்ற உடற்பயிற்சி கூடத்துக்கு ‘சீல்’ வைப்பு மாநகராட்சி நடவடிக்கை

நடிகர் சாகித் கபூர் சென்ற உடற்பயிற்சி கூடத்துக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்து உள்ளது.

Update: 2020-03-17 23:54 GMT
மும்பை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மும்பை உள்பட மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், தியேட்டர்கள், பூங்காக்களை மூட கடந்த 13-ந் தேதி இரவு மாநில அரசு உத்தரவிட்டது. எனினும் இந்த உத்தரவை மீறி நடிகர் சாகித் கபூர் அவரது மனைவியுடன் பாந்திரா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் நடிகர் சாகித் கபூர் சென்ற உடற்பயிற்சி கூடத்துக்கு மும்பை மாநகராட்சி ‘சீல்’ வைத்து உள்ளது.

உரிமம் ரத்து செய்யப்படும்

இது குறித்து மாநகராட்சி அதிகாரி வினாயக் விஸ்புதே கூறுகையில், ‘‘மாநில அரசின் உத்தரவை மீறி உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டு இருந்தது தவறு ஆகும். உடற்பயிற்சி கூடத்தில் ஒரு நபர் இருந்தாலும் அது தவறுதான். சம்பந்தப்பட்ட உடற்பயிற்சி கூட உரிமையாளரின் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என்றார்.

இந்தநிலையில், நடிகர் சாகித் கபூர் எனது நெருங்கிய நண்பர். என்னை சந்திக்க அவர் உடற்பயிற்சி கூடத்துக்கு வந்தார் என அதன் உரிமையாளர் யுதிஷ்திர் ஜெய்சிங் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்