கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-18 06:30 GMT
கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பார்கள். அதன்பிறகு கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், அருகில் மற்றொரு பாறையில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதற்காக கன்னியாகுமரி படகுத்துறையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என்ற 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகள் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து வருவார்கள். தினமும் ஆயிரக்கணக்கானோர் படகில் பயணம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

விடுதி அறைகளில் ஏற்கனவே புக் செய்தவர்களும் ரத்து செய்து விட்டனர். பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்களின் கூட்டம் இல்லை. குமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அரண்மனை ஏற்கனவே மூடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் படகில் ஏற வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபற்றி பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்