நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை

ராயக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் உணவில் வி‌‌ஷம் கலந்து 3 பேரை கொன்ற விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-03-19 00:00 GMT
ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 46). விவசாயி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 3-10-2014 அன்று முருகன் அந்த உறவினரின் வீட்டிற்கு சென்று உணவில் அரளி விதையை கலந்து விட்டு வந்தார்.

பின்னர் வி‌‌ஷம் கலந்த உணவை சாப்பிட்ட மற்றொரு பக்கத்து வீட்டை சேர்ந்த முனியப்பன் (96), ஜீவானந்தம் (7), பூஜா(4) ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி அசோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில், அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் வாதாடினார்.

மேலும் செய்திகள்