கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை; கலெக்டர் ஆய்வு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வுசெய்தார்.

Update: 2020-03-23 06:34 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி மற்றும் இதர மாநிலங்களில் இருந்து வருகின்ற வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய்லீலா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா ஆகியோர் உடன்இருந்தனர். 

மேலும் செய்திகள்