144 தடை உத்தரவால் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

144 தடை உத்தரவால் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-03-24 22:00 GMT
திருமங்கலம்,

தமிழகம் முழுவதும் நேற்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை போட்டி போட்டி வாங்கினர். இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.

10 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 30 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும், விலையின்றி கொடுக்கப்பட்ட கறிவேப்பிலை, கொத்தமல்லி 5 ரூபாய்க்கும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கடுமையான கூட்டம் இருந்தது.

திருமங்கலம் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 60 பேர் கொண்ட குழுவினர் 2 வாரங்களாக தொடர்ந்து பல்வேறு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருவதால் அங்கு கூடுதலாக சுகாதார பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

திருமங்கலம் நகராட்சி சார்பில் தெருவோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. உசிலம்பட்டி ரோடு, மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, சந்தை பேட்டை பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டன.

இதற்கான நடவடிக்கைகளை நகராட்சி ஆணையர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்