தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிப்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-03-25 00:02 GMT
புதுச்சேரி,

உலகத்தையே கொரோனா வைரஸ் தொற்று மிரட்டி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த தகவல்கள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சமூகத்தில் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமூக விரோதிகள் பரப்பும் இந்த தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

தீவிர கண்காணிப்பு

எனவே சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ‘வாட்ஸ் அப்’ மூலம் பரப்பப்படும் தகவல்களை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் சுந்தர் கோஷ், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவர்மன், சந்தோஷ் மற்றும் 10 போலீசாரை கொண்ட சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீஸ் படையானது கண்காணித்து வருகிறது.

பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பினால் இந்திய தண்டனை சட்டம் 188 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். இதன்படி 6 மாத சிறைதண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டி வரும். எனவே இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்