ஊடரங்கு உத்தரவு; காய்கறி விலை கிடுகிடு உயர்வு
ஊடரங்கு உத்தரவால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காய்கறி
செட்டியார்பட்டி பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு பெரும்பாலான காய்கறிகள் மதுரை மார்க்கெட்டில் இருந்து வருகிறது. அங்குள்ள ஏஜெண்டுகள் லாரி மூலம் இங்கு காய்கறிகள் அனுப்பி வருகின்றனர். ஊடரங்கு உத்தரவால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இங்கு கடந்த வாரம் சில்லரைக்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 ஆக இருந்தது. தற்போது ரூ. 60 ஆகவும், தக்காளி 1 கிலோ ரூ. 15 ஆக இருந்தது. தற்போது ரூ.40 ஆகவும், வெங்காயம் ரூ.50 ஆக இருந்தது தற்போது ரூ.100 ஆகவும், கேரட் 1 கிலோ ரூ. 50 ஆக இருந்தது தற்போது ரூ. 70 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து லாரிகளில் கொண்டு வர இயலாத நிலை இருப்பதாகவும், இங்குள்ள வியாபாரிகளை மதுரைக்கு வந்து வாங்கிச்செல்லுமாறு ஏஜெண்டுகள் கூறுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வாக இருந்தாலும் நேற்று ஏராளமானோர் காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.