ஊரடங்கின்போது வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கி உறுதிமொழி எடுக்க வைத்த போலீஸ் அதிகாரி

ஊரடங்கின்போது வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார்.

Update: 2020-03-26 22:30 GMT
பொங்கலூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் பஸ் நிறுத்தத்தில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை தடுத்து நிறுத்தி ஏன் முகக்கவசம் அணியாமல் செல்கிறீர்கள்?, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வாருங்கள் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

அத்துடன் முகக்கவசம் அணியாமல் வந்த அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் கொடுத்ததுடன், அனைவரையும் இடைவெளி விட்டு நிற்க வைத்து இனிமேல் தேவையில்லாமல் சாலையில் நடமாடமாட்டேன், அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க வருவேன் என்று உறுதி மொழி எடுக்கவைத்தார். இதனால் பொதுமக்கள் தங்கள் தவறை உணர்ந்து, போலீஸ் அதிகாரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்