கொரோனா தாக்குதல் எதிரொலி: போலீசாருக்கு வழங்க முககவசம் தயார் செய்யும் பணி மும்முரம்

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக போலீசாருக்கு வழங்க முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-03-26 23:30 GMT
சிவகங்கை, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பல ஆயிரம் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். முதலில் சீனா நாட்டில் பரவிய இந்த வைரஸ் அதன் பின்னர் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி நாட்டில் இந்த வைரஸ் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்கள், ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கடைகள் மற்றும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதையும் சிலர் மீறி பகல் நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இவர்களை போலீசார் வழமறித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தும், சில இளைஞர்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து அவர்களை போலீசார் வழிமறித்து சில ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.

இனியும் இதேபோல் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தனர். இதுதவிர மாவட்டத்தில் ஏராளமான போலீசார் தற்போது இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

போதிய அளவில் அவர்களுக்கு முககவசம் இல்லாததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை பெண் போலீசார் மூலம் முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்