மார்த்தாண்டம் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தேர்வு எழுத வைத்த போலீசார் - கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டனர்

மார்த்தாண்டம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர். கொரோனா குறித்து 10 கேள்விகள் கேட்டு அவர்களை தேர்வு எழுத வைத்தனர்.

Update: 2020-03-28 04:45 GMT
பத்மநாபபுரம்,

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சில இடங்களில் நூதன தண்டனை கொடுத்து வருகிறார்கள். அதாவது, தோப்பு கரணம் போடுவது, தரையில் உருண்டு போவ செய்வது என உத்தரவை மீறியவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜாலியாக உலா வந்தவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்வு வைத்தனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு உத்தரவை மீறி அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் சாலையில் நடந்து சென்ற வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் 2 விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வினாத்தாள்களிலும் தலா 10 வினாக்கள் இருந்தன.

* கொரோனா வைரசின் காதலி பெயர் என்ன?

* கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு?

* கொரோனா வைரசினால் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம் எது?

* கொரோனா வைரசில் இருந்து நம் நாட்டை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என வித்தியாசமான 10 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதை கண்டு அந்த வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ஒரு கேள்விக்கு தவறான பதில் அளித்தால் 10 தோப்பு கரணங்களை போலீசார் போட வைத்தனர். பின்னர், அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு தண்டனையும் கொடுத்தாச்சு, அதே சமயத்தில் அவர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியாச்சு என்று போலீசார் தெரிவித்தனர். கடுமையான நடவடிக்கை எடுக்கும் போலீசார் மத்தியில் மார்த்தாண்டம் பகுதியில் போலீசார் எடுத்த நடவடிக்கை மிகவும் வித்தியாசமாக இருந்தது. போலீசாரின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.

இதேபோல் சுவாமியார்மடம், களியக்காவிளை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு தோப்பு கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்