மாவட்டம் முழுவதும் 358 வழக்குகள் பதிவு; 412 பேர் கைது

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறியதாக 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2020-03-28 22:30 GMT
விருதுநகர், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர் மட்டும் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்க கூட்டமாக கூடி நிற்க கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 144 தடை உத்தரவை மீறி இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிவதும், வணிகர்கள் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் கூட்ட நெரிசலை அனுமதிப்பதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக மாவட்டம் முழுவதும் 417 பேர் மீது 358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 412 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகரில் 75 பேர் மீது 58 வழக்குகளும், சிவகாசியில் 73 பேர் மீது 73 வழக்குகளும், அருப்புக்கோட்டையில் 48 பேர் மீது 45 வழக்குகளும், ராஜபாளையத்தில் 46 பேர் மீது 46 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தூரில் 80 பேர் மீது 51 வழக்குகளும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 64 பேர் மீது 64 வழக்குகளும், திருச்சுழியில் 31 பேர் மீது 21 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்