டெல்லி மாநாட்டில் பங்கேற்று கடலூர் வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பா? மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு கடலூர் மாவட்டத்துக்கு திரும்பி வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2020-04-01 06:07 GMT
கடலூர்,

டெல்லியில் முஸ்லிம்கள் மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்டோர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் 28 பேர் கடலூர் திரும்பி வந்துள்ளனர். இவர்களின் விவரங்களை கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்து வந்தனர்.

இது பற்றி சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா கூறுகையில், டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் இருந்து அந்த மாநாட்டுக்கு எத்தனை பேர் சென்று வந்தார்கள் என்ற விவரத்தை ஆய்வு செய்தோம். இதில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றதில் 28 பேர் திரும்பி வந்தது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டோம். அதில் பண்ருட்டியை சேர்ந்த 6 பேர், கம்மாபுரம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 8 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 4 பேர் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 7 பேர் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் நாளை(அதாவது இன்று) அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்த பின்னரே முடிவு தெரியும். மேலும் இதுதவிர வேறு யாரேனும் டெல்லிக்கு சென்று வந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்