கபிஸ்தலம் பகுதிகளில், ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும் பணி - அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்

கபிஸ்தலம் பகுதிகளில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-02 22:15 GMT
கபிஸ்தலம்,

தமிழக அரசு கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி நேற்று முதல் ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கபிஸ்தலம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் வழங்கும் பணியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர் மகாலட்சுமி பாலு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தவச்செல்வன், ஒன்றிய ஆணையர்கள் அறிவானந்தம், ஆனந்தராஜ், ஒன்றிய பொறியாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் வினோதினி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், கூட்டுறவு சங்க செயலாளர் ரவி, துணை செயலாளர் பாலு, ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கபிஸ்தலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட 4,905 ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

கும்பகோணம் மொட்டை கோபுரம் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கும்பகோணத்தில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் மற்றும் தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் முறை, எத்தனை பேர் சாப்பிடுகின்றனர்? ஊரடங்கின்போது உணவு எந்த முறையில் வழங்கப்படுகிறது? என்பது பற்றி கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமியிடம் கேட்டறிந்தார். மேலும் உணவு உண்ணும்போது சமூக இடைவெளியை அவசியம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், உணவு உண்பவர்கள் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்