எடை குறைவாக பொருட்கள் வழங்கியதால் ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகை - ராமநத்தம் அருகே பரபரப்பு

ராமநத்தம் அருகே எடை குறைவாக பொருட்கள் வழங்கியதால், ரேஷன் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Update: 2020-04-03 06:42 GMT
ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று, தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண தொகை மற்றும் அரிசி, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கடைக்கு வருபவர்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட்டங்கள் அங்கு போடப்பட்டிருந்தது. அதன்படி கடைக்கு வந்தவர்கள் இந்த கட்டத்துக்குள் நின்றபடி, பிளாஸ்டிக் குழாய் மூலம் ஒரு மீட்டர் தூரத்தில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். அதே போல் ராமநத்தம், தொழுதூர், அரங்கூர், வைத்தியநாதபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் ரூ.1000 மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், சர்க்கரை, அரிசி மற்றும் பருப்பு ஆகியன எடை குறைவாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். தகவலறிந்த ஊராட்சி செயலாளர் விக்னேஷ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்